2671. | உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும் வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி,- நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங் கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்-தந்தான். |
நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் - ஒளி விளங்கும் மழுவாயுதத்தையும் அழகிய நெற்றியில் நெருப்பைக் கக்கும் சிவந்த கண்ணையும்உடைய; தழல்புரை சுடர்க் கடவுள் - நெருப்பை ஒத்த ஒளிவடிவான சிவபெருமான்; தந்ததமிழ் - அருளிய தமிழ் மொழியை; உழக்கும் மறை நாலினும் - வருந்தி ஓதிஅறியக்கூடிய வழக்கினாலும்; உயர்ந்து உலகம் ஓதும் வழக்கினும் - உயர்ந்தோராகியஉலகம் கூறுகின்ற உலகவழக்காலும்; மதிக் கவியினும் மரபின்நாடி - அறிவாலும் செய்யுள் வழக்காலும் மரபு நெறியாலும் முறைப்பட ஆராய்ந்து; தந்தான் - உலகினர்க்கு அருளினான். உழக்கும் மறை என்பது கனம் முதலிய முறையே பயின்று ஓசை தவறாமல் ஓதி உணரத்தக்க வேதம்என்பதாம். இதனால் வேதம் ஓதுதலிலுள்ள கடின நிலை புலப்படும். ஆதியில் தமிழ் நூல் அகத்தியற்குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் எனச் சேனாவரையர் கூற்றையும் இதனோடுஒப்பிடலாம். அகத்தியர் அருளிய இலக்கணம், சிற்றகத்தியம், பேரகத்தியம் எனப்படும்.மதிக்கலையினும் எனப் பாடமோதிப் புத்தி கப்பு விட்டதனாலும் எனப் பழைய உரை கூறும். வடமொழி தென்மொழிகளுக்கு இறைவன் சிவபெருமானே முதல் என்ற கருத்தை இது புலப்படுத்தும். (ஒவ்வொருசமயத்தாரும் தத்தம் கடவுளரே மொழிகளைப் படைத்தனர் என்று தம் கொள்கையைக் கூறுவர்)இப்பாடல்களால் கடலை உண்டது, வாதாபி வலம் அழித்தது, விந்தத்தை அடக்கியது. தென்திசை வட திசையைச் சமனாக்கியது. முதலிய அகத்தியரின் அருஞ்செயல்களை அறிய முடிகிறது. நீண்ட தமிழால்அளந்ததில் (2666) தொடங்கி இங்குத் தமிழ் தந்தான் எனக் கூறுவதால் அகத்தியரின் பெருமையில் தமிழே முதலும் முடிவுமாய் விளங்குவதுபுலனாம். 41 |