2678. | வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற, காதல் மிக நின்று, எழில் கமண்டலுவின் நல் நீர் மா தவர்கள் வீசி, நெடு மா மலர்கள் தூவ, போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான். |
வேதியர்கள் வேதமொழி வேறுபல கூற - அந்தணர்கள் பல்வேறு வகைப்பட்ட வேத வாக்கியங்களைச் சொல்ல; காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல்நீர் மாதவர்கள் வீசி - அன்பு மிகுதலால் சூழ்ந்து நின்று அழகிய கமண்டலங்களிலுள்ள நல்ல நீரை மிக்க தவமுடையவர்கள் தெளித்து; நெடுமாமலர்கள் தூவ - அழகிய பெரிய மலர்களை மேலே சொரிய, (அகத்தியர் இராமனை); போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் - மலர்கள் மணம் வீசும் குளிர்ந்த சோலைக்குள் அழைத்துக் கொண்டு போனார். வேதமந்திரங்களைக் கூறி நன்னீர் தெளித்து மலர் தூவல் அம்முனிவர் செய்யும் உபசார வகை. கமண்டலு - கமண்டலம். குண்டிகை கரசும் எனவும் வழங்கப்பெறும். போது என்பது அப்பொழுது மலரும் நிலையில் உள்ளமலர். 48 |