2681.' "தண்டக வனத்து உறைதி"
     என்று உரைதரக் கொண்டு,
உண்டு வரவு இத் திசை என,
     பெரிது உவந்தேன்;
எண் தகு குணத்தினை;' எனக்
     கொடு, உயர் சென்னித்
துண்ட மதி வைத்தவனை ஒத்த
     முனி சொல்லும்:

    உயர் சென்னித் துண்டமதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்-
தன் உயர்ந்த தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமானைப் போன்ற
அகத்திய முனிவர் சொல்வாரானார்; எண்தகு குணத்தினை - யாவரும்
மதிக்கத்தக்க நற்பண்புகளுடைய இராமனே! ; தண்டக வனத்து உறைதி
என்று உரைதரக் கொண்டு -
தண்டகாரணியத்தில் நீ
எழுந்தருளியிருக்கிறாய் என (இங்கு வரும் முனிவர்கள்) கூறிய சொல்லைக்
கேட்டு; இத்திசை உண்டு வரவு எனக் கொடு - இத்திசைக்கு உனது
வருகை உண்டு என்று கொண்டு; பெரிது உவந்தேன் - மிக
மகிழ்ந்திருந்தேன்; என - அசை.

     எண் தகு குணத்தினை - எட்டு மேலான பண்புகளைக் குறிக்கும்
என்பர். (குறள். 9) துண்டமதி - மதித்துண்டு, இளம்பிறை மதி. அகத்தியரைச்
சிவபிரானுக்கு ஒப்பிடல் முன்னர்க் காணப்படுகிறது. 'ஈசன் நிகர் ஆய்' (2670);
உண்டு வரவு எனக் கருதியதை ஒட்டி இராமன் எழுந்தருளியமை குறிப்பால்
பெறப்படும்.                                                   51