2683. 'வாழும் மறை; வாழும் மனு நீதி;
     அறம் வாழும்;
தாழும் இமையோர் உயர்வர்;
     தானவர்கள் தாழ்வார்;
ஆழி உழவன் புதல்வ! ஐயம்
     இலை; மெய்யே;
ஏழ் உலகும் வாழும்; இனி, இங்கு
     உறைதி' என்றான்.

    ஆழி உழவன் புதல்வ - ஆணைச் சக்கரத்தை உலகெங்கும்
செலுத்தும் தயரதன் மகனே!; இனி மறைவாழும் - (நீ இங்குத் தங்குவதால்)
இனி மேல் வேதங்கள் வாழ்வு பெறும்; மனுநீதி வாழும் - மனு
தருமசாத்திரமும் வாழும்; அறம் வாழும் - எல்லா வகைத் தருமங்களும்
நிலை பெறும்; தாழும் இமையோர் உயர்வர் - அரக்கர் கொடுமையால்
தாழ்வுற்ற தேவர்கள் உயர்ந்த நிலை அடைவர்; தானவர்கள் தாழ்வார் -
அரக்கர்கள் தாழ்வடைவார்கள்; ஏழ் உலகும் வாழும் - ஏழு உலகங்களும்
வாழ்வடையும்; ஐயம் இலை மெய்யே - இதில் சந்தேகம் இல்லை;
உண்மையே!; இங்கு உறைதி என்றான் - இவ்விடத்தில் தங்குவாயாக
என்று அகத்தியர் கூறினார்.

     வாழும் மறை என்றதால் எக்காலத்தும் அழியாத வேதங்கள் என்பர்
சிலர். பதினெட்டு நீதி நூல்களில் தலையாயது மனுநூல் ஆகையால் அதனை
எடுத்துரைத்தார். ஆழி உழவன் - ஆணைச் சக்கரமாம் ஏரைக் கொண்டு
உலகு முழுவதையும் உழுபவன் எனத் தயரதனின் ஆட்சிப் பெருமை
கூறப்பட்டது. தானவர் என்பவர் தனு என்பாளிடம் தோன்றியவர் எனும்
பொருளால் அசுரர்களைச் சுட்டும். அசுரர்போல அரக்கர்கள் கொடியவர்கள்
எனவே அவரையே சுட்டியது என்பர்.                             53