2688.'கன்னி இள வாழை கனி
     ஈவ; கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு
     போதும் உள; தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல்
     ஆறும் உள; போதா,
அன்னம் உள, பொன் இவளொடு
     அன்பின் விளையாட.

    (பஞ்சவடியில்) கனி ஈவ கன்னி இளவாழை - பழங்களைத் தரும் மிக
இளமையான வாழை மரங்களும்; கதிர் வாலின் செந்நெல் உள - ஒளி
பொருந்திய நுனியையுடைய செந்நெற்பயிர்களும் உள்ளன; தேன் ஒழுகு
போதும் உள -
தேன் வழிகின்ற மலர்களும் உள்ளன; தெய்வப் பொன்னி
எனல் ஆய புனல் ஆறும் உள -
தெய்வத் தன்மை பொருந்திய 'காவிரி
என்று கூறத்தக்க நீர் வெள்ளம் பாயும் நதிகளும்' உள்ளன; பொன்
இவளொடு அன்பின் விளையாட -
பொன்னையொத்த இச்சீதையுடன்
அன்போடு விளையாடுவதற்கு; போதா அன்னம் உள - பெருநாரைகளும்
அன்னங்களும் உள்ளன.

     கன்னி இளவாழை - ஒன்றன் பின் ஒன்றாக அழியாது ஈன்று
கொண்டேயிருக்கும் வாழை எனலுமாம். பஞ்சவடி நீர்வளம் மிக்க
இடமாதலால் வாழை, நெல், சோலை, நீர்ப்பறவைகள் ஆகியன விளங்கி
நிற்கின்றன. கதிர்வால் - ஒளி பொருந்திய வாலோடு விளங்கும் என்பர்.
உணவுக்கும் நீருக்கும் அவ்விடத்தில் பஞ்சமில்லை என்பது இதனால்
விளங்கும். மீண்டும் சீதைக்குப் பொழுது போகப் பறவைக் கூட்டங்கள்
உள்ளன என்றார். பொன்னி யாற்றைக் கூறியதால் கவியின் நாட்டுப்பற்று
நன்கு புலப்படும்.

     கன்னி இள - ஒரு பொருட் பன்மொழி. கதிர்வாலின் செந்நெல் எனப்
பாடங் கொண்டு ஒளிரும் வாலை உடைய ஒருவகைக் கெண்டை மீனைக்
குறிக்கும் என்பர்.                                             58