இராமன் முதலியோர் சடாயுவைக் காணுதல் கலி விருத்தம் 2690. | நடந்தனர் காவதம் பலவும்; நல் நதி கிடந்தன, நின்றன, கிரிகள் கேண்மையின் தொடர்ந்தன, துவன்றின; சூழல் யாவையும் கடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே. |
(இராமன் முதலிய மூவரும்) காவதம் பலவும் நடந்தனர் - பல காத வழியும் நடந்தவர்களாய்;கிடந்தன நல் நதி - இடையே ஓடும் சிறந்த ஆறுகளையும்; நின்றன கேண்மையின் தொடர்ந்தன கிரிகள் - ஆங்காங்கே நிலைபெற்றனவாயும் உறவுள்ளன போலத் தொடர்ச்சியாகவுள்ளனவுமான மலைகளும்; துவன்றின - நெருங்கியிருந்தன; சூழல் யாவையும் கடந்தனர் - இத்தகைய மலைகள் சூழ்ந்திருந்த காடுகளையும் தாண்டிச் சென்றனர்; கழுகின் வேந்தை(க்) கண்டனர் - சடாயு எனும் கழுகரசனைப் பார்த்தனர்; ஏ - அசை. காவதம் - காதம். கிடந்தன - படுத்திருந்தன எனக் கூறும் வகையில் நீண்டு விளங்கின என்றும் உரைப்பர். நின்றன என்பது தனித் தனியாய் இருந்த மலைகள். தொடர்ந்தன என்பது மலைத் தொடர்ச்சிகள். நல்நதி - புண்ணிய ஆறுகள் என்றும் ஆம். 1 |