இராம-இலக்குவரும், சடாயுவும் ஒருவரை ஒருவர் ஐயுறல்

2699.'இறுதியைத் தன்வயின்
     இயற்ற எய்தினான்
அறிவு இலி அரக்கன் ஆம்;
     அல்லனாம் எனின்,
எறுழ் வலிக் கலுழனே?
     என்ன உன்னி, அச்
செறி கழல் வீரரும்,
     செயிர்த்து நோக்கினார்.

    அச் செறி கழல் வீரரும் - அந்த நெருங்கிய வீரக்கழல் அணிந்த
வீரர்களாம் இராமலக்குவர்களும்; (இவன்) தன்வயின் இறுதியை இயற்ற
எய்தினான் -
தனக்குச் சாவை உண்டாக்கிக் கொள்ள இங்கு வந்தவனாம்
இவன்; அறிவு இலி அரக்கன் ஆம் - அறிவற்ற யாரோ ஓர் அரக்கன்
ஆவான்; அல்லன் ஆம் எனின் - அவ்வாறு அரக்கன் அல்லாதவன்
ஆனால்; எறுழ் வலிக் கலுழனே - மிக்க வலிமையுடைய கருடனே
ஆவான்; என்ன உன்னி - என்று எண்ணி; செயிர்த்து நோக்கினார் -
சந்தேகப்பட்டுப் பார்த்தனர்.

     தன்வயின் இறுதி இயற்ற என்பதற்குத் தன்மூலமாக இராமலக்குவர்க்கு
அழிவைச் செய்ய என்று கூறலுமாம். நல்லறிவின்றித் தீயவழிப் புகுந்து
தனக்குத் தானே அழிவைத் தேடியதால் 'அறிவிலி அரக்கன்' எனப்பட்டான்.
எறுழ் வலி - ஒருபொருட்பன்மொழி. இது வடிவு பற்றி வந்த ஐயநிலை
உவமையணி.                                                 10