'தயரதன் மைந்தர்' எனக் கேட்டு, சடாயு மகிழ்தல்

2706.வினவிய காலையில்,
     மெய்ம்மை அல்லது
புனை மலர்த்
     தாரவர் புகல்கிலாமையால்,
'கனை கடல் நெடு நிலம்
     காவல் ஆழியான்,
வனை கழல் தயரதன்,
     மைந்தர் யாம்' என்றார்.

    வினவிய காலையில் - கேட்ட பொழுது; மெய்ம்மை அல்லது
புகல்கிலாமையால் புனை மலர்த் தாரவர் -
உண்மை அல்லாமல்
வேறொன்றைப் பேசுவதில்லை ஆதலால் அழகிய பூமாலை அணிந்த
இராமலக்குவர்; கனை கடல் நெடுநிலம் காவல் ஆழியான் - ஒலிக்கும்
கடலாற் சூழ்ந்த பெரிய உலகம் யாவையும் காக்கும் ஆணைச்
சக்கரமுடையவனும்; வனை கழல் தயரதன் மைந்தர்யாம் என்றார் -
தரித்த வீரக்கழலுடையவனுமாகிய தயரதனுடைய மக்கள் நாங்கள்' எனக்
கூறினர்.

     முன்னம் அறியாதவரிடம் உண்மையைக் கூறக் கூடாது என்பது
அரசியல் நீதி. எனினும் இராமலக்குவர் எத்தகையோரிடமும் அஞ்சாது
உண்மை கூறும் தனிப் பண்புடையவர்களாவர். புனை - அழகு தயரதன் -
தசரதன் என்பதன் திரிபு. பத்துத் திக்குகளிலும் தன் தேரைச் செலுத்தி
வெற்றி கண்டவன்; அரக்கர் தேர் பத்தை வென்றவன்; கருடனைத் தன்
தேர்க் கொடியாகக் கொண்டவன் எனவும் பல காரணம் கூறுவர்.

     புகல்கிலாமை என்பதிலுள்ள கில் என்பது உறுதிப் பொருளை
உணர்த்தும் இடைநிலை.                                        17