2709. | தழுவினர், எடுத்தனர், தடக் கையால்; முகம் கழுவினர் இருவரும், கண்ணின் நீரினால்; வழுவிய இன் உயிர் வந்த மன்னனும், அழிவுறு நெஞ்சினன், அரற்றினான்அரோ. | இருவரும் - இராமலக்குவராம் இருவரும்; தடக்கையால் தழுவினர் எடுத்தனர் - பெரிய கைகளால் தழுவி எடுத்தவர்களாய்; கண்ணின் நீரினால் முகம் கழுவினர் - கண்ணீரால் சடாயுவின் முகத்தைக் கழுவினார்கள்; வழுவிய இன்உயிர் வந்த மன்னனும் - நீங்கியது எனக் கருதப் பெற்ற இனிய உயிர் திரும்பவும் வரப் பெற்ற கழுகரசனும்; அழிவுறு நெஞ்சினன் அரற்றினான் - மனம் அழிந்தவனாய்ப் பின்வருமாறு வாய்விட்டுப் புலம்பினான்; அரோ - ஈற்றசை. தயரதனின் மரணத்தைக் கேட்ட சடாயு உணர்வு நீங்கினார். அவரைத் தழுவி எடுத்துத் தம் கண்ணீரால் நீராட்டினர் இராமலக்குவர். அவர் அவ்வாறு ஆவன செய்ததால் சடாயுவுக்கு மூர்ச்சை தெளிந்து உணர்வு வந்தது. தம் நண்பன் இறந்த துன்பம் பெருக அவர் புலம்பலானார். தடக்கை - முழந்தாள் அளவு நீண்டகை, கண்ணீராற் கழுவுதல், பரதன் வசிட்ட முனிவனோடு தயரதனின் உருவைக் கண்டழுத நிலையில் 'கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்' என்ற நிலையோடு ஒப்பிடற் குரியது (2225). 20 |