2719.என்று சொல்ல, இருந்து
     அழி நெஞ்சினன்,
நின்ற வீரரை
     நோக்கி நினைந்தவன்,
"அன்று அது" என்னின்,
     அயோத்தியின், ஐயன்மீர்
சென்றபின் அவற் சேர்குவென்
     யான்' என்றான்.

    என்று சொல்ல - என்று இராமலக்குவர் வருந்திக் கூற; இருந்து
அழி நெஞ்சினன் -
அழிந்த வண்ணம் இருக்கின்ற மனத்தை உடைய
சடாயு; நின்ற வீரரை நோக்கி நினைந்தவன் - தன் எதிரே நின்ற
வீரர்களாம் இராமலக்குவரைப் பார்த்து ஒரெண்ணத்தை எண்ணியவனாய்;
அது அன்று என்னின் - தீக்குளிக்கும் அச்செயல் உடன்பாடு அன்று
என்றால்; ஐயன்மீர் அயோத்தியின் சென்றபின் அவற்சேர்குவென் யான்
என்றான் -
அன்புடையவர்களே! நீங்கள் அயோத்தி நகரைப் போய்ச்
சேர்ந்த பின் நான் தயரதனைத் துறக்க உலகில் சென்று அடைவேன் எனக்
கூறினார்.

     இப்போது நான் இறப்பது உங்களுக்கு உடன்பாடு அன்று என்றால்
வன வாசம் முடிந்து அயோத்தி செல்லும் அளவு உங்களுக்குக்
களைகணாய் இருக்கிறேன் எனச் சடாயு இராமலக்குவரின் கருத்துக்கிசைந்து
கூறியது புலனாகிறது. அயோத்தியில் அகழி, மதில், படை, சான்றோர்,
அமைச்சர் இருப்பதால் அவர்க்குப் பாதுகாப்பு வேறு வேண்டாம் என்பதால்
அயோத்தியின்... சென்றபின்' என்றார்.

     அன்பினால் இராமலக்குவரை 'ஐய' என விளித்தார் சடாயு. இது மரபு
வழுவமைதி.                                                30