சடாயு, 'நீவிர் வனம் புகுந்தமை என்?' என வினவல்

2720.'வேந்தன் விண் அடைந்தான்
     எனின், வீரர் நீர்
ஏந்து ஞாலம் இனிது
     அளியாது, இவண்
போந்தது என்னை? புகுந்த என்?
     புந்தி போய்க்
காந்துகின்றது, கட்டுரையீர்'
     என்றான்.

     (பின் அச்சடாயு) வேந்தன் விண் அடைந்தான் எனின் -
தயரதச்சக்கரவர்த்தி துறக்கம் சென்றான் என்றால்; வீரர் நீர் ஏந்து ஞாலம்
இனிது அளியாது இவண் போந்தது என்னை -
வீரர்களாகிய நீங்கள்
ஆள்வதற்குரிய நாட்டை மனம் விரும்பிக் காப்பாற்றாமல் இங்கு வந்தது
எக்காரணத்தால்?; புகுந்த என் - வந்து சேர்ந்த தீமைகள் எவை?;
புந்திபோய்க் காந்துகின்றது - என் அறிவு ஒரு நிலையில் நிற்காமல்
எரிகின்றது; கட்டுரையீர் என்றான் - எடுத்து முறையாகக் கூறுங்கள்
என்றார்.

     வீரர் நீர் என்றதால் பெரு வீரர்களாய்க் காணப்படும்
இராமலக்குவரைப் பகைவர் விரட்டியிருக்க இயலாது என எண்ணிய
எண்ணம் குறிப்பாக உணரப்பெறுகிறது. 'ஏந்து ஞாலம்' என்பது வழி வழி
உரிமையுடன் ஆண்டு வரும் நில உலகம். புந்தி - புத்தி, இங்கு மனம்
எனவும் கொள்ளலாம்.

     கட்டுரை என்பது மனத்திலுள்ள பொருளை வகைப்படுத்தி முறையாகத்
தொகுத்துரைத்தல்.                                            31