2721. | 'தேவர், தானவர், திண் திறல் நாகர், வேறு ஏவர் ஆக, இடர் இழைத்தார்எனின்,- பூ அராவு பொலங் கதிர் வேலினீர்!- சாவர் ஆக்கி, தருவென் அரசு' என்றான். | பூ அராவு பொலங்கதிர் வேலினீர் - கூராகத் தீட்டப் பெற்றுப் பொன் ஒளி வீசும் வேல்படையைக் கொண்டவர்களே!; தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் - தேவர்களாயினும் அசுரர்களாயினும் நாகலோகத்தவராயினும் வேறு ஏவராயினும் உங்களுக்குத் துன்பம் செய்தார் என்றால்; சாவர் ஆக்கி அரசு தருவென் என்றான் - அவர்களை மாண்டவராக்கி உங்கள் அரசை மீட்டுக் கொடுப்பேன் என உறுதி கூறினார் (சடாயு). பூ - கூர்மை. பூத்தொழில் அமையுமாறு பல சிற்பத் தொழில் பட அராவுதல் என்றும் கொள்வர். பூ அராவு வேற் புரந்தரன் (3017) என்பார் பின்னரும், ஏவர் என்றதால் பிற மனிதர், கந்தருவர் போன்றவரைக் குறிக்கிறது. திண்திறல் - ஒருபொருட் பன்மொழி. 32 |