சடாயு, சீதையைப்பற்றி வினவ, இலக்குவன் இயம்புதல்

2725. பின்னரும், அப்
பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன
     அணங்கினை நோக்கினான்;
'மன்னர் மன்னவன்
     மைந்த! இவ் வாணுதல்
இன்னள் என்ன
     இயம்புதியால்' என்றான்.

    பின்னரும் - பிறகும்; அப்பெரியவன் பெய் வளை அன்னம்
அன்ன அணங்கினை நோக்கினான் -
அப்பெரியோராம் சடாயு, அணிந்த
வளையல்களையுடைய அன்னம் போன்ற தெய்வப் பெண்ணாம் சீதையைப்
பார்த்தவராய்; மன்னர் மன்னவன் மைந்த - சக்ரவர்த்தி தயரதனின்
மகனே!; இவ்வாணுதல் இன்னள் என்ன இயம்புதியால் என்றான் - இந்த
ஒளி பொருந்திய நெற்றியை உடையவள் இன்னாள் என்று சொல்வாய்
என்றார்.

     பெரியவன் - பண்பு, கல்வி, வாழ்நாள் முதலியவற்றால் பெரியவர்.
பெய் வளை அன்னம் என்பது இல்பொருள் உவமை. அணங்கு - உருவகம்.
நோக்கினான் - முற்றெச்சம். வாள்+நுதல்=வாணுதல், ஒளிபொருந்திய
நெற்றியை உடையவள்; அன்மொழித் தொகை.                     36