பஞ்சவடியில் தங்கும் தன் விருப்பை இராமன் உரைத்தல் 2727. | கேட்டு உவந்தனன், கேழ் கிளர் மௌலியான்; 'தோட்டு அலங்கலினீர்! துறந்தீர், வள நாட்டின்; நீவிரும் நல்நுதல்தானும் இக் காட்டில் வைகுதிர்; காக்குவென் யான்' என்றான். | கேழ் கிளர் மௌலியான் கேட்டு உவந்தனன் - ஒளி விளங்கும் முடியுடைய சடாயு அது கேட்டு மிகவும் மகிழ்ந்தவராக; தோட்டு அலங்கலினீர் - பூவிதழையுடைய மாலை அணிந்தவர்களே; வள நாட்டின் துறந்தீர் - வளப்பமுள்ள நாட்டை விட்டு நீங்கி வந்தவர்களானீர்; நீவிரும் நல்நுதல் தானும் இக்காட்டில் வைகுதிர் - நீங்களும் நல்ல நெற்றியை உடைய சீதையும் இந்த வனத்தில் தங்கி வாழுங்கள்; யான் காக்குவென் என்றான் - நான் உங்களை எல்லாம் காப்பேன் எனக் கூறினார். சடாயு முடியுடையவர் என்பதை முன்னரே 'நீளுறு மேருவின் நெற்றி முற்றிய வாள் இரவியின் பொலி மௌலியான்தனை (2696) எனச் சுட்டுவார்; கழுகுக்குள்ள உச்சிக் கொண்டை போன்ற மயிர்த் தொகுதியை மௌலி என உரைத்தார் என்பர். தோடு - பூவிதழ். தந்தையாம் தயரதன் மறைந்தாலும் நாடு விட்டுக் காடு வந்தாலும் இராமன் முதலியோர்க்குத் தாம் காவலாய் இருப்பதாகக் கூறும் சடாயுவின் கூற்றில் தந்தையுளம் வெளிப்படுகிறது. 38 |