2730. | ஆய சூழல் அறிய உணர்த்திய தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான் போய பின்னை, பொரு சிலை வீரரும் ஏய சோலை இனிது சென்று எய்தினார். | ஆய சூழல் அறிய உணர்த்திய - அத்தகைய பஞ்சவடி எனும் இடத்தை அறியும்படி தெரிவித்த; அத்தூய சிந்தை தோம்இல் குணத்தினான் - அந்தத் தூய்மையான மனமும் குற்றமற்ற நற்பண்புகளும் கொண்ட சடாயு; போய பின்னை - அவ்விடம் விட்டுச் சென்ற பின்னர்; பொரு சிலை வீரரும் ஏய சோலை இனிது சென்று எய்தினார் - போர் புரிதற்குரிய வில்லை உடைய வீரர்களாம் இராமலக்குவர் அங்கு அமைந்திருந்த சோலையை மகிழ்ந்து போய் அடைந்தனர். ஏய சோலை - அகத்தியர் அவர்களைத் தங்குமாறு கூறிய சோலை எனலுமாம். தூய சிந்தை தோமில் குணத்தை முன்னரே தூய்மையான (2694) என்ற பாடலில் உணர்த்தியுள்ளார் இத்தொடர் சடாயுவை நன்கு விளக்குதற்குரிய நயமுடையது. 41 |