2734. | எழுவுறு காதலாரின் இரைத்து இரைத்து, ஏங்கி ஏங்கி, பழுவ நாள் குவளைச் செவ்விக் கண்பனி பரந்து சோர, வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி, அழுவதும் ஒத்ததால், அவ் அலங்கு நீர் ஆறு மன்னோ | அவ் அலங்கு நீர் ஆறு - அந்த அசைந்து ஓடுகிற நீரையுடைய கோதாவரி எனும் நதி; வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி - குற்றம் இல்லாத மெய்ம்மை மொழியுடைய இராமலக்குவர் காட்டில் வந்து வாழும் துன்ப நிலையைப் பார்த்து; எழுவுறு காதலாரின் - அவர்கள் மேல் எழுந்த அன்பினார்போல்; இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி - அடிக்கடி பெருமூச்சு விட்டு மிகவும் இரங்கி; பழுவ நாள் குவளைச் செவ்விக் கண்பனி பரந்து சோர - தொகுதியாக உள்ள அன்றலர்ந்த நீல மலர்கள் ஆகிய அழகுள்ள கண்களிலிருந்து நீர்த் துளிகள் எங்கும் பரவி வழிய; அழுவது ஒத்தது - புலம்பி அழுவதைப் போன்றிருந்தது; ஆல், மன், ஓ - என்பன அசைகள். அலங்குதல் - அசைந்தாடுதல் வழுஇலா வாய்மை என்பது தண்டகாரணிய முனிவர்களுக்கு, அவர்களை அரக்கரின் கொடுமையிலிருந்து விடுவிக்கக் கூறிய மொழிகளை நிறை வேற்ற நிற்பவர் எனலாம். மேலும், தம் தந்தை கைகேயிக்குக் கொடுத்த வரத்தின் மெய்ம்மையைக்காக்க வனம்புகுந்த மைந்தர் எனலும் பொருந்தும் கண்ணுக்குக் குவளை; முந்திய பாடலில் (2733) 'குவளை ஒண் கண்' எனக் கூறியதை நோக்குக. கண்பனி - கண்ணீர். பழுவம் என்பது காடு. இது ஆகுபெயராய்த் தொகுதியை உணர்த்திற்று. குவளைக்காடு எனலுமாம். பின்னர் 'எல்லி அம் குவளைக் கானத்து' (2737) எனவும் வருதல் காண்க. குவளை மலரில் தோன்றும் தேன் வழிவதைக் கண்ணீர் (கள்+நீர்) வடிப்பதாகக் கொள்வாரும் உளர். கோதாவரியைச் சேர்ந்த காலம் பனிக்காலத்திற்குச் சற்று முந்தியது. ஆதலால் பனி என்பதற்கு பனி நீர்த்துளி எனவும் கூறுவர். இரைத்து இரைத்து, ஏங்கி ஏங்கி எனும் அடுக்குகள் மிகுதி குறித்து நின்றன. உருவகமும், தற்குறிப்பேற்ற அணியும் இப்பாடலில் அமைந்துள்ளன. 3 |