இராமனும் சீதையும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்தல்

2735.நாளம்கொள் நளினப் பள்ளி,
     நயனங்கள் அமைய, நேமி
வாளங்கள் உறைவ கண்டு,
     மங்கைதன் கொங்கை நோக்கும்,
நீளம்கொள் நிலையோன்; மற்றை
     நேரிழை, நெடியநம்பி
தோளின்கண் நயனம் வைத்தாள்,
     சுடர்மணித் தடங்கள் கண்டாள்.

    நீளம் கொள் சிலையோன் - நீண்ட வில்லை உடைய இராமன்;
நாளம் கொள் நளினப் பள்ளி - தண்டினைக் கொண்ட தாமரை மலராகிய
படுக்கையில்; நயனங்கள் அமைய நேமி வாளங்கள் உறைவ கண்டு -
கண்கள் மூடியிருக்கச் சக்கரவாகப் பறவைகள் தங்கியிருப்பதைப் பார்த்து;
மங்கை தன் கொங்கை நோக்கும் - சீதையின் மார்பகங்களைப்
பார்த்தான்; நேரிழை நெடியநம்பி தோளின்கண் நயனம் வைத்தாள் -
தக்க அணிகலன்களை அணிந்த சீதை பெரியோனும் ஆண்களிற்
சிறந்தவனுமான் இராமனின் தோளினைப் பார்த்தாள்; சுடர்மணித் தடங்கள்
கண்டாள் -
ஒளிவீசும் நீலமணியால் ஆகிய குன்றுகளை நோக்கினாள்;
மற்று - வினை மாற்றுப் பொருளில் வந்து; ஐ - சாரியை.

     நாளம் - உட்துளை கொண்ட தண்டு. நேமி வாளம் - சக்கர வாகம்
எனும் நீர்வாழ் பறவை. இது வட்டமாய்க் குவிந்துயர்ந்த வடிவு கொண்டது.
எனவே தாமரை மலரில் இப்பறவைகளைப் பார்த்ததும் சீதையின் கொங்கை
வடிவை இராமன் கண்டான். பம்பைப் பொய்கையை வருணிக்கும் போது
'மங்கைமார் தடமுலை எனப் பொலிவன வாளம்' (3728) என்பர். சீதை
இராமனின் தோள்களைக் கண்டு அவற்றைப் போன்று ஆற்றின் கண் உள்ள
மணற்குன்றுகள் இருப்பதை எண்ணினாள். இராமன் புறப்பொருளினைக்
காணும் போது தன் துணைவியையும் இராமனின் தோள் அழகைக் காணும்
போது சீதைக்குப் புறத்தே உள்ள மணற்குன்றின் அமைப்பையும்
உவமையாகக் காணும் நிலை புலப்படுகின்றது. புறக்காட்சியில் அகநிலையும்
அகக் காட்சியில் புறநிலையும் காண்பதில் முறையே இராமன் சீதை
ஆகியோரின் அன்புள்ளம் தெரிகிறது. மணித்தடம் - அழகிய கரை
எனலுமாம். நெடியோனாய் உலகளந்த திருமாலை நினைப்பூட்டும் 'நெடிய
நம்பி' எனும் தொடர் தயரதனின் மூத்த மகன் எனலுமாம். மகளிர்க்குக்
கொங்கையும் ஆடவர்க்குத் தோளும் சிறந்த உறுப்புகளாதலால் அவற்றை
இங்கே ஒருங்கே காண்கிறோம். நேரிழை என்பது அத்திரி முனிவனின்
மனைவி அனுசுயை கொடுத்த அணிகலன்களை நினைவூட்டும். சக்கரவாகம்
என்ற சொல் சக்கரவாளம் என ஆயிற்று. சக்கரம் என்பதை நேமி என்ற
சொல்லால் சுட்டினார். நேரிழை - அன் மொழித் தொகை.

     ஒரு பொருளைக் கண்டு ஒப்புமையால் மற்றொரு பொருளை
நினைப்பது கூறியதால் இது நினைப்பணி.                           4