2744. | 'கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால் இற்றவன், அன்று தொட்டு இன்றுகாறும், தான் நல் தவம் இயற்றி, அவ் அனங்கன், நல் உருப் பெற்றன னாம்' எனப் பெயர்த்தும் எண்ணுவாள் |
கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால் இற்றவன் - தொகுதியான அழகிய சடையை உடைய சிவனின் நெற்றிக் கண்ணால் எரித்தலால் உடல் அழியப் பெற்றவனான; அவ் அனங்கன் தான் - அந்த மன்மதனே; அன்று தொட்டு இன்று காறும் நல் தவம் இயற்றி - தன் உடல் அழிந்த அன்று முதல் இன்று வரை நல்ல தவங்களைச் செய்து; நல் உருப் பெற்றனனாம் - இந்த நல்ல வடிவைப் பெற்றனன் ஆகும்; எனப் பெயர்த்தும் எண்ணுவாள் - என்று மீண்டும் சூர்ப்பணகை நினைப்பாள். முன்னர் மன்மதனோ என்று ஐயுற்று அவன் வடிவம் தான் சிவன் நெற்றிக் கண்ணால் எரிந்து விட்டதே என எண்ணியவள் இந்த வடிவைப் பெறுதற்கு வேறு காரணம் இருக்க வேண்டும் என எண்ணுகிறாள். அனங்கன் - அங்கம் இல்லாத மன்மதன். தான் - துணிவுப் பொருளுணர்த்தும் இடைச்சொல். இது தற்குறிப்பேற்ற அணி. மன்மதன் அனங்கனான கதை: முன்னர்க் கைலாயத்தில் சனகாதி முனிவர்க்குச் சிவன் யோக நிலையை உணர்த்த யோக நிலையில் இருந்த போது தேவர்களின் ஏவலான் மன்மதன் சிவன் மீது மலர்ப்பாணங்களை எறிய அதனால் சினங் கொண்ட சிவன் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார். 13 |