2756.'கரந்திலன், இலக்கணம்
     எடுத்துக் காட்டிய,
பரம் தரு நான்முகன்; பழிப்பு
     உற்றான் அரோ-
இரந்து, இவன் இணை அடிப்
     பொடியும், ஏற்கலாப்
புரந்தரன், உலகு எலாம்
     புரக்கின்றான்' என்றாள்.

    இலக்கணம் கரந்திலன் எடுத்துக் காட்டிய பரம் தரு நான்முகன்
-
உத்தம இலக்கணங்களை எல்லாம் (இவனுடம்பில்) அமைத்து விளங்கச்
செய்த மேன்மை பொருந்திய நான்முகன்; பழிப்பு உற்றான் அரோ -
இகழப்பட்டவன் ஆனான் அல்லவா? (ஏனெனில்); இவன் இணை அடிப்
பொடியும் இரந்து ஏற்கலாப் புரந்தரன் -
இவனுடைய திருவடித்தூசின்
பெருமையை வேண்டியும் பெற முடியாத தேவேந்திரன்; உலகு எலாம்
புரக்கின்றான் என்றாள் -
மூவுலகங்களையும் ஆட்சி புரிகின்றான் என்று
கருதினாள். (சூர்ப்பணகை).

     காட்டிய - உண்டாக்கிய, படைத்த. பழிப்புற்றமை - இவன் கால்
தூசிக்கு ஒப்பாகாத இந்திரன் மூவுலகுக்கும் அரசுரிமை பெற்றுள்ளான்.
உத்தம இலக்கணங்கள் கொண்ட இவனோ காட்டிலே திரிகின்றான். எனவே
அவ்வாறு படைத்த பிரமனின் தொழில் பயனற்றதாக இகழ்ச்சிக்கு
இடந்தந்தது.

     பரந்தரு நான் முகன் - பரம் பொருளாம் திருமாலால் பெறப்பட்ட
பிரமன் எனலுமாம். தேவேந்திரன் தேவருலகிற்கு மட்டுமின்றி மூவுலகிற்கும்
அரசன் என்பது புராணமரபு.

     அரோ - வினாப் பொருளில் வந்தது; இதனைப் பொது நோக்கில்
அசை என்பாரும் உளர்.                                       25