2761. | பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா, அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள்; திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள், செவ்வியள், பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள். |
பங்கயச் செல்வியை மனத்துப்பாவியா - செந்தாமரை மலரில் வாழும் திருமகளை உள்ளத்தில் தியானத்து; அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் - தனக்குச் சித்தியாய் இருந்த அத்திருமகளின் மூலமந்திரத்தைச் செபித்தாள்; (அதன் பயனாய்) திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள் - முழுமதியைவிட மேம்பட்டு விளங்கும் முகமுடையவளும் அழகியவளுமாய்; பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள் - மிக்க ஒளி வானில் பரவி விளங்க வடிவம் மாறி வெளிப்பட்டாள். திங்களின் சிறந்து - மதியைப் போலச் சிறந்து - என ஒப்புப் பொருளிலும் கொள்வர். செவ்வி - பருவ அழகின் நிறைவு. அங்கையின் ஆய மந்திரம் என்பது முன்னர்த் தனக்குச் சித்தியாயுள்ள மந்திரம் - திருமகள் மந்திரத்தைத் தியானத்தோடு கூறி மிகுந்த அழகு பெற்றாள். அழகின் செல்வியாக உள்ள திருமகளை நினைந்து வேண்டும் அழகிய வடிவம் பெற்றாள் என்பதாம். முதல் நூலில் சூர்ப்பணகை பார்க்கப் பயங்கரமான முகமுடையவள்; பேரியைப் போலப் பருத்த வயிற்றை உடையவள்; பார்க்கப் பயங்கரமான கண்களை உடையவள்; நெருப்புக் கொழுந்து போல் சிவந்து விரிந்து குறுகிய தலைமயிரை உடையவள்; பார்ப்பவர்களுக்குச் சொல்ல முடியாத வெறுப்பை உண்டாக்கும் வடிவு கொண்டவள்; அவள் குரல் கேட்பவர்களை மூர்ச்சை அடையச் செய்யும்; மிகவும் வயது சென்றவள்; கபடமாகப் பேசுபவள்; கெட்ட நடத்தை உடையவள்; குரூபிகளுக்குள் முதலானவள் என வருணிக்கப் பெறுவாள். (வான்மீகம் ஆரண்ய. 17 ஆம் சருக்கம்) இதற்கு நேர் எதிரான வடிவம் இப்பாடலிலும் அடுத்த பாடலிலும் (2762) தீட்டப் பெற்றுள்ளது. 30 |