இராமன் வியப்படைதல்

2765.'நூபுரமும், மேகலையும்,
     நூலும், அறல் ஓதிப்
பூ முரலும் வண்டும், இவை
     பூசலிடும் ஓசை-
தாம் உரைசெய்கின்றது; ஒரு தையல்
     வரும்' என்னா,
கோ மகனும், அத் திசை குறித்து,
     எதிர் விழித்தான்.

    நூபுரமும் மேகலையும் நூலும் அறல் ஓதிப் பூ முரலும் வண்டும்
இவை பூசலிடும் ஓசை -
காற்சிலம்பும், இடை அணியும், நூலிற் கோத்த
அணிகலன்களும் கருமணல் போன்ற கூந்தலில் சூடும் மலரில் மொய்க்கும்
வண்டுகளும் ஆகிய இவை ஆரவாரம் செய்யும் ஓசை; ஒருதையல் வரும்
என்னா உரை செய்கின்றது -
ஒரு பெண் வருகிறாள் என்று
சொல்கிறதாக; கோமகனும் அத்திசை குறித்து எதிர் விழித்தான் -
சக்கரவர்த்தி திருமகனாம் இராமனும் அவ்வோசை வந்த திக்கைக் குறித்து
எதிர் நோக்கினான். தாம் - அசை.

     மேகலை - இடையில் அணியும் மணிகள் கோத்த பல
வடங்களையுடைய ஓர் அணிகலன். நூல் - பூணூல் போன்று அணியும்
பொன் மாலை என்பர். பூசல் - பேரொலி. 'பூசல் வண்டரற்றும் கூந்தல்
பொய்ம்மகள்' (2778) என வருதல் காண்க. அணிகலன்களின் ஒலியும்
வண்டின் ஒலியும் ஒரு பெண் வருகின்றாள் என்பதைக் கட்டியம் கூறின.
உரை செய்தல் - குறிப்பித்தல் எனலுமாம்.

     நூல் - ஆகுபெயர். பேசாததைப் பேசுவது போலக் கூறியது. மரபு
வழுவமைதி.                                                 34