2778.பேசலன், இருந்த வள்ளல் உள்ளத்தின்
     பெற்றி ஓராள்;
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம் மகள்,
     'புகன்ற என்கண்
ஆசை கண்டருளிற்று உண்டோ? அன்று
     எனல் உண்டோ?' என்னும்
ஊசலின் உலாவுகின்றாள்; மீட்டும்
     ஓர் உரையைச் சொல்வாள்;

    பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் -
(அவ்வாறு எண்ணி மேலும்) பேசாதிருந்த இராமனின் மனத்தின் தன்மையை
உணராதவளான; பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம்மகள் -
மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையுடைய பொய்யுருக் கொண்ட
சூர்ப்பணகை; புகன்ற என்கண் ஆசை கண்டு அருளிற்று உண்டோ -
இவன் என்னிடத்தில் கூறிய சொற்கள் ஆசை உண்டாகி அருள் புரிந்தது
ஆகுமோ?; அன்று எனல் உண்டோ - நீ விரும்புவது தக்கது அன்று
எனக் கூறுவதாகுமோ?; என்னும் ஊசலின் உலாவுகின்றாள் - என்று இரு
வேறுபட்ட எண்ணங்களிடையே ஊஞ்சலைப் போல் முன்னும் பின்னும்
தடுமாறும் கருத்துடையவளானாள்; மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள் -
மீண்டும் ஒரு சொல்லைக் கூறுவாள் ஆனாள்.

     பெற்றி - பெருமையும் ஆம். பூசல் - ரீங்கார ஒலி எனவும் ஆம்.
பொய்ம்மகள் - பொய் பேசும் பெண் எனவும் உரைப்பர். கண்டு -
உண்டாகி, 'முனைவன் கண்டது முதல் நூலாகும்' (தொல். சொல். மரபு. 94)
ஆசை கொண்டானோ கொள்ளவில்லையோ எனத் தடுமாறும் கருத்து
நிலையை 'ஊசலின் உலாவுகின்றாள்' என்பர்.

     உரை - முதனிலைத் தொழிற் பெயர். ஊசல் தடுமாறும் கருத்தைக்
குறிப்பதோர் இலக்கணை.                                      47