2800. | 'தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள்; தான்இக் கல் நெடு மனத்தி சொல்லும், கள்ள வாசகங்கள்' என்னா, மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம்போல், மிதிலை வேந்தன் பொன்னொடும் புனிதன் போய், அப் பூம் பொழிற் சாலை புக்கான். |
இக்கல் நெடு மனத்தி தன்னொடும் - இந்தக் கல் போன்ற கடின மனம் கொண்ட இவளோடும்; தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் - எத்தகைய தொடர்பும் இல்லாதவர் எனக் கூறியும்; தான் - இவள் தானும், கள்ள வாசகங்கள் சொல்லும் என்னா - வஞ்சகச் சொற்களை இவள் மேலும் சொல்லுவாள் என்று எண்ணி; புனிதன் - தூயோனாம் இராமன்; மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் - மின்னல் பின்னே தொடர மேகம் முன்னே செல்வது போல்; மிதிலை வேந்தன் பொன்னொடும் போய் அப்பூம் பொழிற் சாலை புக்கான் - மிதிலை மன்னனாம் சனகனின் மகள் சீதையுடன் சென்று அந்த அழகிய சோலையிலுள்ள பன்ன சாலைக்குள் புகுந்தான். கல் நீரிலே கிடப்பினும் அதன் ஈரத்தைப் பெறாதிருக்கும் அது போல் அரக்கரும் இரக்கமற்ற பண்பினராம். 'வைகலும் நீருட்கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாகும் - அஃதே போல வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்குக் கல்லினும் வல்லென்னும் நெஞ்சு' (அறநெறிச் சாரம் 51) என்ற பாடலின் கருத்தை இத்துடன் ஒப்பிடலாம். தொடர்பு இலாதேம் குலம், கல்வி, பிறப்பு, பண்பு முதலிய எவ்வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். கள்ள வாசகங்கள் - வஞ்சகச் சொற்கள். மின்னலும் மேகமும் இணைந்த கருத்தினை ஒட்டி முன்னரே 'பருவக்கால மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி' (2797) என வருதல் காண்க. மிதிலையை மிதி என்ற மன்னன் ஆண்டதால் அந்நகருக்கு இப்பெயர் வந்தது. பொன் - தன்மையாலும் அருமையாலும் சுடச் சுட ஒளிர்வதாலும் சீதைக்கு ஒப்பாயிற்று. பிற மாதரைச் சிந்தையாலும் தீண்டாததால் இராமன் புனிதன் எனப்பட்டான். இதில் உவமை அணி உளது. 69 |