2839.'இந்திரனும், மலர் அயனும்,
     இமையவரும், பணி கேட்ப,
சுந்தரி பல்லாண்டு இசைப்ப, உலகு
     ஏழும் தொழுது ஏத்த,
சந்திரன்போல் தனிக் குடைக்கீழ்
     நீ இருக்கும் சவை நடுவே
வந்து, அடியேன் நாணாது,
     முகம் காட்ட வல்லேனோ?

     இந்திரனும் மலர் அயனும் இமையவரும் பணிகேட்ப -
தேவேந்திரனும் தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் பிரம்மாவும் தேவர்களும்
நீ இட்ட கட்டளைகளைக் கேட்டுக் குற்றேவல் செய்ய; சுந்தரி பல்லாண்டு
இசைப்ப -
இந்திராணி 'பல்லாண்டு' எனும் வாழ்த்துப் பாடலைப் பாட;
உலகு ஏழும் தொழுது ஏத்த - ஏழு உலகங்களில் உள்ளவர்கள்
வணங்கிப் புகழ; சந்திரன் போல் தனிக் குடைக்கீழ் நீ இருக்கும் சவை
நடுவே -
முழுமதி போன்ற ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் கீழே நீ
கொலு வீற்றிருக்கும் சபையின் நடுவில்; அடியேன் வந்து நாணாது முகம்
காட்ட வல்லேனோ -
அடியாளாகிய நான் வந்து வெட்கமின்றி (மூக்கும்
காதும் அறுபட்ட) என் முகத்தைக் காட்டும் தகுதி உடையேனோ? (ஆகேன்
என்றவாறு);

     சுந்தரி - தேவமங்கையர் எனவும் கூறுவர் 'பொன்னகர் மடந்தையர்,
விஞ்சையர் பூவையர், பன்னக வனிதையர், இயக்கர் பாவையர், முன்னின
பணி முறை மாறி முந்துவார் (4883) என ஊர்தேடு படலத்தில் வந்த
செய்யுள் இதற்கு மேலும் விளக்கம் தரும்.

     பல்லாண்டு - பல ஆண்டுக் காலம் வாழ வாழ்த்துதல் பெரியாழ்வார்
பாடிய 'திருப்பல்லாண்டு' நினைத்தற்குரியது. (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரியாழ்வார், திருப்பல்லாண்டு 1-12) உலகேழு - கீழேழு மேலேழு
உலகங்களைக் குறிக்கும். அடியேன் - தங்கை நிலையைக் குறிக்கும்.
இப்பாடல் இராவணன் கொலு மண்டபச் சிறப்பும் அங்கு உறுப்பறைகள்
செல்லல் கூடாது என்பதையும் சுட்டும்.                           108