இராமன் வர, அவனிடம் முறையிடுதல்

2845. என்று, இன்ன பல பன்னி, இகல்
     அரக்கி அழுது இரங்கி,
பொன் துன்னும் படியகத்துப்
     புரள்கின்ற பொழுதகத்து,
நின்று, அந்த நதியகத்து, நிறை
     தவத்தின் குறை முடித்து,
வன்திண்கைச் சிலை நெடுந்தோள்
     மரகதத்தின் மலை வந்தான்.

    என்று இன்ன பல பன்னி - என இவ்வாறு பலவற்றைச் சொல்லி;
இகல் அரக்கி அழுது இரங்கி - வலிய அந்தச் சூர்ப்பணகை புலம்பி
வருந்தி; பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து -
அழகு மிக்க (அத்தவச்சாலையின்) நிலத்திடத்துப் புரண்டழும் காலத்து; வன்
திண்கைச் சிலை நெடுந்தோள் மரகதத்தின் மலை -
மிகவலிய கையில்
வில்லை ஏந்தி நெடுந் தோளுடைய மரகதம் போன்ற மலை எனும்படி
உள்ள இராமன்; அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து நின்று
வந்தான் -
அக்கோதாவரி ஆற்றின் துறையில் விதி முறைப்படி செய்யும்
நாட்கடன்களைச் செய்து முடித்து அங்கிருந்து தவச்சாலை நோக்கி
வந்தான்.

     பன்னுதல் - பலமுறை வருந்திக் கூறுதல். முன்னரும் 'தன்
குலத்தினோர் பெயரெலாங் கூறி ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி நின்று
அழைத்தாள்' (2831) என வரும். பொன் - அழகு. 'பொன் புனைந்த
கழலடியோன்' (பு. வெ. மாலை 7.2. கொளு) என்று இப்பொருளில்
பயன்பட்டுள்ளது. பொழுது - இங்குக் காலையைக் குறிக்கும். இராமனுக்கு
மரகதமலை இக்காப்பியத்தில் பல இடங்களில் 'மரகதப் பெருங்கல்' (532)
'பொரு அரு மரகதப் பொலன் கொள் மால்வரை' (5273) எனக் குறிக்கப்
பெறும். இராமன் கடன்களாற்றுவதால் தவத்தின் குறை தீர்ந்தது எனவும்
கூறுவர்.                                                    114