2857. | 'வான் காப்போர், மண் காப்போர், மாநாகர் வாழ் உலகம்- தான் காப்போர், இனி தங்கள் தலை காத்து நின்று, உங்கள் ஊன் காக்க உரியார் யார்? என்னை, உயிர் நீர் காக்கின், யான் காப்பென்; அல்லால், அவ் இராவணனார் உளர்!' என்றாள் |
என்னை நீர் உயிர் காக்கின் - (என் ஆசையை நிறை வேற்றி) என் உயிரை அழியாமல் நீர் காப்பீரானால்; யான் காப்பென் - நான் உங்களை இராவணனாரிடமிருந்து காப்பேன்; அல்லால் இனி அவ் இராவணனார் உளர் - அல்லாவிடில் உம்மை அழிக்க என் அண்ணனாம் அந்த இராவணனார் இருக்கிறார்; (அதனால்) வான் காப்போர் - மேலுலகைக் காக்கும் தேவர்களிலும்; மண்காப்போர் - நிலவுலகைக் காக்கும் அரசர்களிலும்; மாநாகர் வாழ் உலகம் காப்போர் - பெரிய நாகர்கள் வாழும் உலகங்காப்போரிலும்; தங்கள் தலைகாத்து நின்று - தங்களுடைய தலையை அறுபடாமல் காத்து; உங்கள் ஊன் காக்க உரியார் யார் என்றாள் - உங்களுடைய உடல்களைப் பாதுகாக்கத் தக்கவர் யார் என்று கேட்டாள். (ஒருவருமில்லை, என்னைத் தவிர). தான் - அசை. மண்ணுலகு விண்ணுலகு மற்றெல்லா உலகுகள் ஆகியவற்றில் உள்ளவர்கள் இராவணனுக்கு அடிப்பட்டவரே. அவர்களில் எவரும் இராமனைக் காக்க இராவணனை எதிர்த்து வாரார். எனவே உங்களைக் காக்க நான் ஒருத்தியே உளேன்' எனச் சூர்ப்பணகை கூறினாள். ஊன் - உடல் 'ஊனைக் குறித்த உயிரெல்லாம்' (குறள். 1013) என வருதல் காண்க. மாநகர் என்று பாடங் கொண்டு மாநகரங்களில் வாழும் உலகம் காப்போர் என்றுங் கூறுவர். 126 |