2870. | 'காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர்; என்னினும், யான் மிகையோ? கள்வர் ஆம், பொறி இல், அடல் அரக்கர் அவரோடே செருச் செய்வான் அமைந்தீர் ஆயின், தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து, அவற்றைத் தடுப்பென் அன்றே? "பாம்பு அறியும் பாம்பின் கால்" என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ? |
காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர் என்னினும் - மூங்கில் போலும் தோளை உடைய உம் மனைவியைத் (சீதையை) துறக்க மாட்டீர் என்றாலும்; யான் மிகையோ - நான் உம்மோடு சேர்ந்திருப்பது அதிகமாகுமா? (ஆகாது); கள்வர் ஆம் பொறிஇல் அடல் அரக்கர் அவரோடே செருச் செய்வான் அமைந்தீர் ஆயின் - வஞ்சகரான அறிவும் திருவுமில்லாத வலிமிக்க இராக்கதர்களுடனே போர் செய்ய விரும்பினீர் என்றால்; தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து - இராக்கதர் தாம் ஐம்பொறிகள்போல் பல மயக்கந்தரும் வஞ்சனைகள் செய்யும் அவர்களின் தந்திரங்களை அறிந்து; அவற்றைத் தடுப்பென் அன்றே - அத்தந்திரச் செயல்களைத் தடுத்து விடுவேன் அல்லவா?; பாம்பு அறியும் பாம்பின் கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ - பாம்பானது பாம்பின் காலை அறியும் எனக் கூறும் உலக முதுமொழியையும் அறியீரோ? காம்பு - மூங்கில். மகளிர் தோள்களுக்கு மூங்கில் உவமை ஆகும். அறியும் - போலும், அரக்கர் குலத்தில் பிறந்தும் சூர்ப்பணகை அவர்களைக் 'கள்வர்' எனக் கூறுவது இராமனை அடைய விரும்பியதின் விளைவு. அவன் வெறுத்தவர்களை அவளும் வெறுப்பதாகக் காட்டுவதுடன் அவர்களை அழிக்க அவனுக்குத் துணை யாவதாகவும் ஆசை மீதூரக் கூறுகிறாள். மேலும் விளக்கம் தரப் பழ மொழியையும் எடுத்துரைக்கிறாள். 'புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புனலூர பொது மக்கட்காகாதே பாம்பறியும் பாம்பின கால் (பழமொழி நானூறு 5.) என்பது கீழ்க்கணக்காம். பாம்புறையும் இடம் எனக் கூறுவர் 'அரவுக் குறியி னயலவரறியா' (பெருங். 4.13.149) என்பதும் காண்க. 139 |