2872. | 'பெருங்குலா உறு நகர்க்கே ஏகும் நாள், வேண்டும் உருப்பிடிப்பேன்; அன்றேல், அருங் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம்; இளையவன்தான், "அரிந்த நாசி ஒருங்கு இலா இவளோடும் உறை வெனோ?" என்பானேல், இறைவ! "ஒன்றும் மருங்கு இலாதவளோடும் அன்றோ" நீ "நெடுங்காலம் வாழ்ந்தது" என்பாய். |
பெருங்குலா உறு நகர்க்கே ஏகும் நாள் - பெரிய கொண்டாட்டம் மிகுந்த அயோத்தி நகரத்து நீங்கள் மீண்டு செல்லும் நாளில்; வேண்டும் உருப்பிடிப்பேன் - நீங்கள் வேண்டும் வடிவம் கொள்வேன்; அன்றேல் - அல்லாவிடில்; இளையவன் தான் அருங்க லாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் - உன் தம்பி நீங்கற்கரிய கோபம் கொண்டவனாயிருந்தான் ஆயினும்; அரிந்த நாசி ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் - அறுபட்ட மூக்கு முழுதுமில்லாதவளுடனே வாழ்வேனோ என்று கூறுவானாயினும்; இறைவ நீ - தலைவனே நீ; மருங்கு ஒன்றும் இலாதவளோடும் அன்றோ நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய் - இடை சிறிதும் இல்லாதவளோடு அன்றோ நீண்ட காலம் வாழ்ந்து வந்தாய் என விடை கூறுவாய். குலா - மகிழ்ச்சியும் ஆம் உருப்பிடிப்பேன் - வேண்டும் உருவத்தை விரும்பியவாறு அமைத்து கொள்வேன் என்றாள். இதற்கு இவளுடைய மாய ஆற்றல் பயன்படும் என்பதாம். அருங்கலாம் - அரிய கலாய்ப்பு. என்பது பழைய உரை. இனி அரிய காரியம் பல சாதித்தோம் எனவுமாம். பெண்டிர்க்கு இடை நுணுகி இருத்தல் அழகு. அதனை மருங்கில்லாதவள் என உயர்வு நவிற்சியால் கூறுவாள். மூக்கின்மைக்கு இடையின்மை சாலும் என விடை கூறுமாறு சூர்ப்பணகை வேண்டுகிறாள். 141 |