சூர்ப்பணகை அவர்களை அச்சுறுத்தி அகலுதல்

2873. என்றவள்மேல், இளையவன்தான், இலங்கு
     இலை வேல் கடைக்கணியா, 'இவளை ஈண்டு
கொன்று களையேம்என்றால், நெடிது அலைக்கும்;
     அருள் என்கொல்? கோவே!' என்ன,
'நன்று, அதுவே ஆம் அன்றோ? போகாளேல்
     ஆக!' என நாதன் கூற,
'ஒன்றும் இவர் எனக்கு இரங்கார்; உயிர்
     இழப்பென், நிற்கின்' என, அரக்கி உன்னா.

    என்றவள்மேல் - என்று கூறிய சூர்ப்பணகையின் மேல்;
இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக் கணியா - இலக்குவன்
விளங்குகின்ற இலை வடிவிலுள்ள வேலைக் கடைக் கண்ணால் பார்த்து;
இவளை ஈண்டு கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் -
இந்த அரக்கியை இவ்விடத்தில் கொன்று ஒழித்திடவில்லை எனின் மிகவும்
வருத்துவாள்; அருள்என் கொல் கோவே என்ன - (உன்) கட்டளை
எதுவோ தலைவா! என்று கேட்க; நன்று அதுவே ஆம் அன்றோ
போகாளேல் ஆக என நாதன் கூற -
நற்செயல் நீ கூறியதே ஆகும்
அல்லவா அவ்வாறு அவள் போகாவிடில் அவ்வாறே செய்க என்று
தலைவனாம் இராமன் சொல்ல; எனக்கு ஒன்றும் இவர் இரங்கார் நிற்கின்
உயிர் இழப்பென் என அரக்கி உன்னா -
என்னிடம் ஒரு வகையிலும்
இவர்கள் அருள் செய்ய மாட்டார் இனி இங்கு நின்றால் என் உயிரை
இழப்பேன் எனச் சூர்ப்பணகை எண்ணி;

     கடைக்கணியா - போர் செய்யும் போது வீரர் தம் போர்க் கருவியைப்
பார்த்துக் கூறுதல், அது அவர்கள் அப்போர்க் கருவி கொண்டு செய்யும்
போர்த் தொழிலையும் சுட்டும். அருள் என் கொல் - இடும் ஆணை
எதுவோ? என எதிர் நோக்கிக் கேட்டது. இனி, இவ்வரக்கியிடம் இதுவரை
அருள் காட்டுவதன் காரணம் எதுவோ என்றலுமாம். இருவர் உரையாடலும்
அவர்தம் நிலையைக் காட்டும் நாடகத் திறம் புலப்பட அமைந்துளது.    142