2876.'அழுங்கு நாள் இது' என்று,
      அந்தகன் ஆணையால்
தழங்கு பேரி எனத்
     தனித்து ஏங்குவாள்;
முழங்கு மேகம் இடித்த
     வெந் தீயினால்
புழுங்கு நாகம் எனப்
     புரண்டாள் அரோ.

    அழுங்கு நாள் - (அந்த அரக்கர்கள்) அழியக் கூடிய நாள்; இது
என்று -
இதுவே என்று; அந்தகன் ஆணையால் - யமனுடைய
கட்டளையால்; தழங்கு பேரி என - (அடிக்கப்பட்டு) ஒலிக்கின்ற பெரிய
முரசு போல; தனித்து ஏங்குவாள் - தனியே (பேராரவாரம் உண்டாகுமாறு)
கதறியழுபவளான சூர்ப்பணகை; முழங்கு மேகம் இடித்த -
ஆரவாரிக்கின்ற மேகம் கக்கும்; வெந் தீயினால் - கொடிய நெருப்பாகிய
இடியினால்; புழுங்கு நாகம் என - வெந்து துடிக்கின்ற பாம்பு போல;
புரண்டாள் - (நிலத்திலே) புரண்டாள்.

     சூர்ப்பணகை கதறியழுத குரலோசை அங்குள்ள கரன் முதலான
அரக்கரை இராமனோடு உடனே போர் செய்ய எழுமாறு தூண்டி
அவரனைவரும் அன்றே இறந்தொழிவதற்குக் காரணமாவது குறித்து அந்தக்
கதறல் இராக்கத அழிவுக் குறிப்பாக யமன் அறைவித்த பறைபோலுமென்றது
தன்மைத் தற்குறிப்பேற்றவணி. பின்னிரண்டடி; உவமையணி. இடிக்கு
அழிதல் நாகத்தின் இயல்பு. அரோ - ஈற்றசை.                       2