2880. | 'மண்ணில், நோக்க அரு வானினில், மற்றினில், எண்ணி நோக்குறின், யாவரும் நேர்கிலாப் பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை, என் கண்ணின் நோக்கி உரைப்ப அருங் காட்சியாள்; |
ஒரு பேதை - (அவர்களோடு உள்ள) ஓர் இளம் பெண்; மண்ணில்- இவ்வுலகத்திலும்; நோக்க அரு வானினில் - எளிதாகக் காண முடியாத மேலுலகத்திலும்; மற்றினில் - (இந்த மண், வானம் அல்லாத) பாதாளத்திலும்; எண்ணி நோக்குறின் - (இவளுக்கு ஒப்பாவார் யாரென்று) கருதிப் பார்க்குமிடத்து; யாவரும் நேர்கிலா - ஒருவரும் ஒப்புமை ஆகமாட்டாத; பெண்ணின் நோக்கு உடையாள் - பெண்ணழகு முழுவதும் உடையவள்; என் கண்ணின் நோக்கி - என் கண்களால் பார்த்து; உரைப்ப அருங்காட்சியாள் - வாயால் எடுத்துச் சொல்லமுடியாத அரிய தோற்றமுடையவள். சீதையின் அழகு மிகுதியும், எவ்வளவு காணினும் முற்றும் காண முடியாத கட்டழகின் மிகுதியும், அவ் விரண்டும் வாயினால் எடுத்துச் சொல்லமுடியாத தன்மையும் ஈற்றடியில் புலப்படும். நோக்கு: அழகு - 'நோயிகந்து நோக்கு விளங்க' - (மதுரைக்: 13) மற்றினில்: இடைச்சொல் உருபேற்று வந்தது. 6 |