2881. | 'கண்டு, "நோக்க அருங் காரிகையாள்தனைக் கொண்டு போனவன், இலங்கையர் கோக்கு" எனா, விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு, அவர் துண்டம் ஆக்கினர், மூக்கு' எனச் சொல்லினாள். |
கண்டு - (இத் தன்மையுடைய அழகிய பெண்ணைப்) பார்த்து; நோக்கு அருங் காரிகையாள்தனை - காணவியலாத அழகுடைய இப்பெண்ணை; இலங்கையர் கோக்கு - இலங்கையில் வாழும் அரக்கர்க்கு அரசனான இராவணனுக்காக; கொண்டு போவன் எனா விண்டு - (இவளை) எடுத்துக் கொண்டு போவேன் என்று சொல்லி; மேல் எழுந்தேனை - அவள் மேல் பாயக் கிளம்பிய என்னை; அவர் வெகுண்டு - அந்த இராமலக்குவர்கள் சினந்து; மூக்குத் துண்டம் ஆக்கினர் - என் மூக்கையறுத்தார்கள்; எனச் சொல்லினாள் - என்று கூறினாள். இராவணன் பொருட்டு அந்தக் கட்டழகியைக் கொண்டு போவேனென்று அவள் மேல் பாய்ந்த பொழுது அவர்கள் வெகுண்டு என் மூக்கை அறுத்தார்கள் என்கிறாள். மேல் விழுதல் - மிகப் பரபரப்போடு முயலுதல் காரிகை - அழகு; 'கழல் யாப்பு காரிகை நீர்த்து' (குறள் 777) மூக்கு என்றது, அறுபட்ட மற்ற உறுப்புக்களுக்கும் உபலட்சணமாம். 7 |