2881.'கண்டு, "நோக்க அருங்
     காரிகையாள்தனைக்
கொண்டு போனவன், இலங்கையர்
     கோக்கு" எனா,
விண்டு மேல் எழுந்தேனை
     வெகுண்டு, அவர்
துண்டம் ஆக்கினர், மூக்கு'
     எனச் சொல்லினாள்.

     கண்டு - (இத் தன்மையுடைய அழகிய பெண்ணைப்) பார்த்து;
நோக்கு அருங் காரிகையாள்தனை - காணவியலாத அழகுடைய
இப்பெண்ணை; இலங்கையர் கோக்கு - இலங்கையில் வாழும் அரக்கர்க்கு
அரசனான இராவணனுக்காக; கொண்டு போவன் எனா விண்டு -
(இவளை) எடுத்துக் கொண்டு போவேன் என்று சொல்லி; மேல்
எழுந்தேனை -
அவள் மேல் பாயக் கிளம்பிய என்னை; அவர்
வெகுண்டு -
அந்த இராமலக்குவர்கள் சினந்து; மூக்குத் துண்டம்
ஆக்கினர் -
என் மூக்கையறுத்தார்கள்; எனச் சொல்லினாள் - என்று
கூறினாள்.

     இராவணன் பொருட்டு அந்தக் கட்டழகியைக் கொண்டு
போவேனென்று அவள் மேல் பாய்ந்த பொழுது அவர்கள் வெகுண்டு என்
மூக்கை அறுத்தார்கள் என்கிறாள். மேல் விழுதல் - மிகப் பரபரப்போடு
முயலுதல் காரிகை - அழகு; 'கழல் யாப்பு காரிகை நீர்த்து' (குறள் 777)
மூக்கு என்றது, அறுபட்ட மற்ற உறுப்புக்களுக்கும் உபலட்சணமாம்.      7