2883. எழுந்து நின்று, உலகு
     ஏழும் எரிந்து உகப்
பொழிந்த கோபக் கனல்
     உக, பொங்குவான்;
' "கழிந்து போயினர்
     மானிடர்" என்னுங்கால்,
அழிந்ததோ இவ் அரும் 
     பழி?' என்னுமால்.

    எழுந்து நின்று - (இவ்வாறு சொல்லி) எழுந்து நின்று; உலகு ஏழும்
எரிந்து உக -
ஏழுலகங்களும் எரிந்து பொடியாய்ச் சிதறும்படி; பொழிந்த
கோபம் கனல் உக -
(கண்கள்) சொரிந்த கோபத் தீ வெளியே சிந்த;
பொங்குவான் - மனங் கொதிப்பவனான கரன்; மானிடர் கழிந்து
போயினர் என்னுங்கால் -
(இத் தீய செயல் செய்த) மனிதர்கள் (என்னால்)
அழிந்து விட்டார்கள் என்னும் மாத்திரத்தில்; இவ் அரும் பழி - (நமக்கு
உண்டான) இந்த அரிய பழி; அழிந்ததோ - தீர்ந்ததாக ஆகுமோ
(ஆகாது); என்னும் - என்று சொன்னான்.

     தான் இப்பொழுது இராமலக்குவர்களை எதிர்த்து அழிப்பது
உறுதியென்பதும், அப்படி அவர்களை அழித்தாலும் அரக்கர் சமூகத்திற்கு
அந்த மானிடரால் உண்டான பழி அழியாது என்பது கரன் கொண்ட
கருத்தாகும்.

     உலகேழ் - மேலேழும் கீழேழுமாகிய பதினான்கு உலகங்கள். எழுந்து
நின்று பொங்குவான் என இயையும். ஆல் ஈற்றசை.                   9