2886. | வெம்பு கோபக் கனலர் விலக்கினார், 'நம்பி! எம் அடிமைத் தொழில் நன்று' எனா, 'உம்பர்மேல் இன்று உருத்தனை போதியோ? இம்பர்மேல் இனி யாம் உளெமோ?' என்றார், |
வெம்பு கோபக் கனலர் - கொதிக்கின்ற கோபத் தீயையுடைய அந்த அரக்கர்கள்; (கரனை நோக்கி) நம்பி - சிறந்த தலைவனே!; எம் அடிமைத் தொழில் நன்று - எங்களது அடிமைத் தொழில் நன்றாக இருந்தது; எனா - என்று தம்மை இகழ்ந்தவர்களாய்; இன்று உம் பர்மேல் - இப்பொழுது தேவர்கள் மேல்; உருத்தனை போதியோ - கோபித்துப் போர் செய்யப் போகிறாயோ (அப்படி இல்லையே இவ்வாறு நீ மனிதரோடு போருக்குச் சென்றால்); இனி இம்பர்மேல் - இனி இந்தவுலகத்தில்; யாம் உளெமோ - நாங்கள் உயிரோடு வாழ்பவர்களாவேமோ?; - என்றார் விலக்கினார் - என்று சொல்லி (க்கரனைப் போருக்குச் செல்லாதபடி) தடுத்தார்கள். 'எம் அடிமைத் தொழில் நன்று' - நாங்கள் உனக்கு அடியவர்களாய் நீ இட்ட கட்டளையை ஏற்றுச் செய்வதற்குப் பணியாளராகக் காத்திருக்க, நீ எங்களுக்கு எந்தவிதக் கட்டளையுமிடாமல் நேரே போருக்குச் சென்றால் எங்கள் அடிமைத் திறம் என்ன பயனைத் தரும்? என்பது; இகழ்ச்சிக் குறிப்பு. நம்பி - அண்மை விளி. 12 |