2887. | 'நன்று சொல்லினிர்; நான் இச் சிறார்கள்மேல் சென்று போர் செயின், தேவர் சிரிப்பரால்; பொன்று, சோரி குடித்து, அவர் கொள்கையை வென்று, மீளுதிர் மெல்லியலோடு' என்றான். |
நன்று சொல்லினிர் - நன்றாகச் சொன்னீர்கள்; நான் இச்சிறார்கள் மேல் - இந்த மானிடச் சிறுவர்களையெதிர்த்து; சென்று போர் செயின் - போய்ப் போர் புரிந்தால்; தேவர் சிரிப்பர் - தேவர்கள் நம்மை இகழ்ந்து சிரிப்பார்கள்; கொன்று சோரி குடித்து - (ஆதலால்) நீங்கள் சென்று அவர்களைக் கொன்று அவர்களின் இரத்தத்தைப் பருகி; அவர் கொள்கையை வென்று - அவர்கள் கொண்ட கோட்பாட்டைச் சிதைத்து வெற்றி கொண்டு; மெல்லியலோடு மீளுதிர் - அவர்களிடமுள்ள மென்மைத் தன்மையுடைய பெண்ணோடு திரும்பி வாருங்கள்; என்றான் - என்று அந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டான். நன்று சொல்லினிர் - தக்கதையே சொன்னீர்கள் என்பது. அவர் கொள்கை : அரக்கர்களைக் கொன்று அறத்தைக் காப்பது என்ற அவர்களின் கோட்பாடு. நிலவுலகில் நிகழும் போரை வானத்திலிருந்து காணுதல் தேவர்தம் இயல்பு. ஆல் : ஈற்றசை. 13 |