சூர்ப்பணகை இராமனைச் சுட்டிக் காட்டுதல்

2889.துமிலப் போர் வல்
     அரக்கர்க்குச் சுட்டினாள்,
அமலத் தொல் பெயர்
     ஆயிரத்து ஆழியான்
நிமலப் பாத நினைவில்
     இருந்த அக்
கமலக் கண்ணனை,
     கையினில் காட்டினாள்.

    அமலத் தொல் பெயர் ஆயிரத்து - குற்றமற்ற பழமை வாய்ந்த
ஆயிரந் திருநாமங்களையுடைய; ஆழியான் - சக்கரப் படையேந்திய
திருமாலின்; நிமலப் பாத நினைவில் இருந்த - குற்றமற்ற திருவடிகளைத்
தியானித்த நிலையில் இருந்த; அக் கமலக் கண்ணனை - செந்தாமரை
மலர் போன்ற கண்களையுடைய அந்த இராமனை; துமிலப் போர்வல்
அரக்கர்க்கு -
ஆரவாரத்தோடு போர் செய்வதில் வல்ல அந்த
இராக்கதர்களுக்கு; கையினில் சுட்டினாள் காட்டினாள் - (சூர்ப்பணகை)
தன் கையால் சுட்டிக் காண்பித்தாள்.

     ஆழியான் - சக்கராயுதம் கொண்ட திருமால்; இங்கே அரங்கநாதன் :
இராமன் குல தெய்வம். இராமன் அரங்கநாதனைத் தியானித்து
வணங்கினான். 'கோதறு தவத்துத் தம்குலத்துளோர் தொழும், ஆதியஞ்
சோதியை அடி வணங்கினான்' (1208) - ஐயனும் அச்சொற் கேளா ஆயிரம்
மௌலியானைக் கைதொழுது' - (1576) என்று கூறப்பட்டுள்ள
செய்திகளையும் 'பணி அரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாம் காண,
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் (638) என்று
கூறப்பட்டுள்ள செய்தியையும் இணைத்து நோக்கினால், இராமன் வழிபட்டது
அரங்கநாதப் பெருமானையே என்பது தெளிவாகும்.

     அமலப் பெயர் : தன்னை உச்சரித்தவரின் கருமங்களையொழிக்கும் திருநாமம். துமிலம் : பேராரவாரம், போர்க்குழப்பம்.

     இப்பாடல் இராமனின் தவநிலையையும் அரக்கரின் அவநிலையையும்
ஒரு மிக்கக் கூறியவாறு காணலாம்.                              15