இராமன் போருக்கு எழுதல் 2891. | ஏத்து வாய்மை இராமன், இளவலை, 'காத்தி தையலை' என்று, தன் கற்பகம் பூத்தது அன்ன பொரு இல் தடக் கையால், ஆத்த நாணின் அரு வரை வாங்கினான். |
ஏத்து வாய்மை இராமன் - யாவரும் புகழ்ந்து கொண்டாடும் சத்தியத்தையுடைய இராமன்; இளவலை - தம்பியான இலக்குவனை (நோக்கி); தையலை(க்) காத்தி என்று - தேவியாகிய சீதையை நீ பாதுகாத்துக் கொண்டிரு என்று கூறி; பூத்தது கற்பகம் அன்ன - பொலிவு பெற்ற கற்பக மரம் போன்ற; பொருவு இல் - வேறு ஒப்பில்லாத; தன் தடக் கையால் - தன்னுடைய பெரிய கையினால்; ஆத்த நாணின் - கட்டப்பட்ட நாண்கயிற்றையுடைய; அருவரை வாங்கினான் - அழித்தற்கரிய மலை போன்ற வில்லை எடுத்துக் கொண்டான். ஏத்து வாய்மை இராமன் - தண்டகாரணியத்தில் வசிக்கும் முனிவர்கள் அரக்கர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் தன்னைச் சரணடைந்த பொழுது அவர்களுக்கு இராமன் அந்த அரக்கர்களையெல்லாம் வேரறுப்பதாக வாக்குறுதி தந்திருந்ததைப் பழுதுபடாதவாறு நிறைவேற்றத் தொடங்கினான் என்பது. ஆத்த - யாத்த: மரூஉ; வரை - உவமையாகுபெயர். 17 |