2892. | வாங்கி, வாளொடு வாளி பெய் புட்டிலும் தாங்கி, தாமரைக் கண்ணன், அச் சாலையை நீங்கி, 'இவ்வழி நேர்மின், அடா!' எனா, வீங்கு தோளன் மலைதலை மேயினான். |
தாமரைக் கண்ணன் - செந்தாமரை மலர் போன்ற அழகிய கண்களையுடைய இராமன்; வாங்கி - வில்லை எடுத்துக் கொண்டு; வாளொடு - வாளுடனே; வாளி பெய் புட்டிலும் - அம்புகளை வைத்துள்ள அம்பறாத் தூணியையும்; தாங்கி - தரித்துக் கொண்டு; அச் சாலையை நீங்கி - அந்தப் பர்ணசாலையை விட்டு நீங்கி; இவ்வழி நேர்மின் அடா எனா - இந்த இடம் (போருக்கு) வாருங்களடா என்று (அரக்கரை நோக்கிக்) கூறி; வீங்கு தோளன் - (போர் கருதியதால்) பூரித்த தோள்களையுடையவனாய்; மலைதலை மேயினான் - போர் செய்யத் தொடங்கினான். இராமன் வாளை இடையிலும், அம்புப் புட்டிலைத் தோள்புறத்திலும் தாங்கினான் என்பது. உள்ளத்தைக் கவரும் அழகும் குளுமையும் நிறமும் உருவும் ஒத்தமையால் தாமரைமலர் இராமனின் கண்களுக்கு உவமையாயிற்று. 18 |