2892.வாங்கி, வாளொடு வாளி
     பெய் புட்டிலும்
தாங்கி, தாமரைக்
     கண்ணன், அச் சாலையை
நீங்கி, 'இவ்வழி
     நேர்மின், அடா!' எனா,
வீங்கு தோளன்
     மலைதலை மேயினான்.

    தாமரைக் கண்ணன் - செந்தாமரை மலர் போன்ற அழகிய
கண்களையுடைய இராமன்; வாங்கி - வில்லை எடுத்துக் கொண்டு;
வாளொடு - வாளுடனே; வாளி பெய் புட்டிலும் - அம்புகளை
வைத்துள்ள அம்பறாத் தூணியையும்; தாங்கி - தரித்துக் கொண்டு; அச்
சாலையை நீங்கி -
அந்தப் பர்ணசாலையை விட்டு நீங்கி; இவ்வழி
நேர்மின் அடா எனா -
இந்த இடம் (போருக்கு) வாருங்களடா என்று
(அரக்கரை நோக்கிக்) கூறி; வீங்கு தோளன் - (போர் கருதியதால்) பூரித்த
தோள்களையுடையவனாய்; மலைதலை மேயினான் - போர் செய்யத்
தொடங்கினான்.

     இராமன் வாளை இடையிலும், அம்புப் புட்டிலைத் தோள்புறத்திலும்
தாங்கினான் என்பது. உள்ளத்தைக் கவரும் அழகும் குளுமையும் நிறமும்
உருவும் ஒத்தமையால் தாமரைமலர் இராமனின் கண்களுக்கு
உவமையாயிற்று.                                             18