அரக்க வீரர் மடிய, சூர்ப்பணகை கரனிடம் ஓடுதல் | 2893. | மழுவும், வாளும், வயங்கு ஒளி முச் சிகைக் கழுவும், கால வெந் தீ அன்ன காட்சியார், எழுவின் நீள் தடக் கை எழு நான்கையும், தழுவும் வாளிகளால், தலம் சார்த் தினான். |
கால வெந் தீ அன்ன - கொடிய ஊழிக் காலத்துத் தீயைப் போன்ற; காட்சியார் - தோற்றத்தையுடையவர்களாகிய அந்த அரக்கர்களின்; மழுவும் - மழுவென்னும் ஆயுதத்தையும்; வாளும் - வாள்களையும்; வயங்கு ஒளி - விளங்குகின்ற ஒளியுடைய; முச் சிகைக் கழுவும் - முத்தலைகளையுடைய சூலங்களையும்; எழுவின் நீள் தடக்கை எழுநான்கையும் - (இவ்வாறான படைக்கலங்களை ஏந்திய) - தூண்களைப் போன்று நீண்ட பெரிய கைகள் இருபத்தெட்டையும்; தழுவும் வாளிகளால் - குறி தவறாமல் தாக்கும் அம்புகளால்; தலம் சார்த்தினான் - துணித்துத் தரையில் வீழ்த்தினான். அப் பதினான்கு அரக்க வீரர்களின் கைகளையும் இராமன் தன் அம்புகளால் துண்டித்துத் தரையிலே தள்ளினான் என்பதாம். போரின் தொடக்கத்திலேயே பதினான்கு அரக்கர்களும் தம் படைகளுடன் கைகளை இழந்தனர் என்பது. 19 |