2896. | 'அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார்' என, பொங்கு அரத்தம் விழிவழிப் போந்து உக, வெங் கரப் பெயரோன், வெகுண்டான், விடைச் சங்கரற்கும் தடுப்பு அருந் தன்மையான். |
விடைச் சங்கரற்கும் - காளை வாகனத்தையுடைய (அழித்தற் கடவுளான) சிவபிரானுக்கும்; தடுப்பு அரும் தன்மையான் - தடுக்க முடியாத வீரத்தன்மையுடையவனான; வெங் கரப் பெயரோன் - கொடிய கரனென்னும் பெயரையுடைய அந்த அரக்கன்; அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என - தான் அனுப்பிய படைத் தலைவர்கள் இறந்தொழிந்தனர் என்று (சூர்ப்பணகை) சொல்ல (க் கேட்டு); பொங்கு அரத்தம் - உள்ளிருந்து பொங்குகின்ற இரத்தம்; விழிவழிப் போந்து உக - தன் கண்களின் வழியாக வெளியே சிந்த; வெகுண்டான் - கோபங் கொண்டான். சங்கரனுக்கும் - உம்மை உயர்வு சிறப்பினது. ரத்தம் என்பதனோடு அகர உயிர் முதலில் வந்து அரத்தம் என்றாயிற்று. 22 |