2897.'அழை, என் தேர்; எனக்கு
     ஆக்கு, வெம் போர்ப் படை;
உழையர் ஓடி, ஒரு
     நொடி ஓங்கல்மேல்,
மழையின், மா முரசு
     எற்றுதிர், வல்' என்றான்-
முழையின், வாள் அரி
     அஞ்ச முழங்குவான்.

    முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் - குகைக்குள்
பதுங்கியிருக்கும் கொடிய சிங்கங்கள் அஞ்சும்படி முழக்கம் இடுபவனான
கரன்; என் தேர் அழை - என் தேரை இங்கே அழையுங்கள்; வெம்
போர்ப் படை எனக்கு ஆக்கு -
எனக்கு வலிய போர் செய்வதற்குரிய
படைக் கலங்களை ஆக்கு; வல் உழையர் ஓடி - விரைவில் ஏவலாட்கள்
ஓடிச் சென்று; ஒரு நொடி ஓங்கல்மேல் - ஒரு நொடிக்குள்ளாக
யானையின்மேல்; மழையின் - மேகம் அதிர்வது போல; மா முரசு
எற்றுதிர் -
பெரிய போர் முரசங்களை முழக்குங்கள்; என்றான் - என்று
கட்டளையிட்டான்.

     உழையர் - குற்றவேல் பணி செய்வோர். வெகுண்ட கரன்
படைக்கலங்களையும் தேரையும் கொண்டு வருக, முரசை முழக்குக என்று
கட்டளையிட, பக்கத்தில் இருந்தவர் ஓடிச் சென்று யானை மேல்
முரசேற்றிப் பறையறைந்து அரக்கச் சேனை வருமாறு கரனது கட்டளையைத்
தெரிவித்தனர் என்பது. ஓங்கல் - யானை: உவமவாகுபெயர். முரசு
முழக்குக்கு மேக முழக்கு உவமையாம்.                           23