2900.காடு துன்றி,
     விசும்பு கரந் தென
நீடி, எங்கும் நிமிர்ந்த
     நெடுங் கொடி-
'ஓடும் எங்கள் பசி' என்று,
     உவந்து, எழுந்து,
ஆடுகின்ற அலகையின்
     ஆடவே,

    காடு துன்றி - காடுகள் எல்லாம் அடர்ந்து நெருங்கி; விசும்பு
கரந்தென -
வானத்தை மறைத்தாற் போல; எங்கும் நீடி நிமிர்ந்த -
எல்லா இடத்தும் நீண்டு உயர்ந்த; நெடுங் கொடி - தேர்களின் நீண்ட
கொடிகள்; எங்கள் பசி ஓடும் என்று - எங்களுடைய பசி விரைவில்
நீங்கிவிடும் என்று; உவந்து எழுந்து - மகிழ்ச்சியோடு எழுந்து நின்று;
ஆடுகின்ற அலகையின் - கூத்தாடுகின்ற பேய்களைப் போல; ஆட -
அசையவும்; 'ஏ' - ஈற்றசை.

     தேரின் கொடிகள் அடர்ந்து வானம் மறைய அசைந்து மேலோங்கி
நிற்பது அக் காட்டின் மரங்கள் மேலெழுந்து வானத்தையளாவி நின்று
மறைத்தல் போலும் என்பது தற்குறிப்பேற்றவணி.

     அலகைகள் பசி ஓடும் என்றது போரில் இறந்தவர் உடலையும்
குருதியையும் உண்ண இடமாகும் என்று கருதியதால் ஆகும். கொடிக்குப்
பேய் ஒப்பு.                                                 26