2901. | தறியின் நீங்கிய, தாழ் தடக் கைத் துணை, குறிகொளா, மத வேழக் குழு அனார், செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும் பொறியின், கான் எங்கும் வெங் கனல் பொங்கவே. |
தறியின் நீங்கிய - (மதத்தால்) கட்டுத்தறியிலிருந்து வெளிப்பட்டவையும்; குறிகொளா - (எவரையும்) ஒரு பொருட்டாக மதியாதவையுமான; தாழ் தடக்கைத் துணை - தாழ்ந்து தொங்குகின்ற பெரிய இரண்டு துதிக்கைகளையுடைய; மதவேழக் குழு அனார் - மதங் கொண்ட யானைக் கூட்டத்தை ஒத்தவர்களாகிய அரக்கர்களின்; செறியும் வாளொடு வாள் - அடர்ந்த வாளாயுதங்கள் ஒன்றோடு ஒன்று; இடை தேய்ந்து - நடுவிலே உராய்தலால்; உகும் பொறியின் - வெளிச் சிந்தும் தீப் பொறிகளால்; கான் எங்கும் - அந்த வனம் எங்கும்; வெம் கனல் பொங்க - கொடிய நெருப்பு ஓங்கியெழவும்; ஏ - ஈற்றசை. அரக்கப் படை வீரர்க்குத் தறியின் நீங்கிய தாழ் தடக்கைத் துணை மத வேழங்கள் உவமையாம். இந்தப் பாடல், தேர்ப் படையைத் தொடர்ந்து சென்ற அரக்கப் படை வீரர்களின் செறிவையும் அவர்கள் ஏந்திய வாட்படைகளின் மிகுதியையும் விளக்கியது. தறி - தூண். தன்னைக் கட்டியுள்ள தறியைக் கடுங்கோபத்தால் முறித்துத் தள்ளிவிட்டுத் தடையின்றி வெளிச் செல்வது மதயானையின் இயல்பு. 27 |