2909.குந்தமும், குலிசமும்,
     கோலும், பாலமும்,
அந்தம் இல் சாபமும்,
    சரமும், ஆழியும்,
வெந் தொழில் வலயமும்,
     விளங்கு சங்கமும்
பந்தமும், கப்பணப்
     படையும், பாசமும்,

    குந்தமும் - சிறிய ஈட்டிகளும்; குலிசமும் - வச்சிரப் படைகளும்;
கோலும் - தடிகளும்; பாலமும் - பிண்டிபாலமென்னும் முறுக்குத்
தடிகளும்; அந்தம் இல் சாபமும் - அளவில்லாத விற்களும்; சரமும் -
அம்புகளும்; ஆழியும் - சக்கரப் படைகளும்; வெந் தொழில் வலயமும் -
கொடிய தொழிலையுடைய வளையங்களும்; விளங்கு சங்கமும் -
வெண்ணிறமாக விளங்கும் சங்குகளும்; பந்தமும் - தீப் பந்தங்களும்;
கப்பணப் படையும் - கப்பணமென்னும் ஆயுதங்களும்; பாசமும் -
கயிறுகளும்-;

     தனது பெருமுழக்கத்தால் பகைவரை அஞ்சச் செய்து அழித்தலால்
சங்கும் ஆயுதத்தின் பால் சேரும். திருமாலின் ஐந்து படைகளுள்
பாஞ்சசன்னியம் என்ற சங்கும் ஒன்றாதலை அறியலாம். கப்பணம் -
இரும்பால் யானை நெருஞ்சிமுள் வடிவில் செய்த கருவி.            35