2910. ஆதியின், அருக்கனும்
     அனலும் அஞ்சுறும்
சோதிய, சோரியும்
     தூவும் துன்னிய,-
ஏதிகள் மிடைந்தன, -
     இமையவர்க்கு எலாம்
வேதனை கொடுத்தன,
     வாகை வேய்ந்தன.

    ஆதியின் - (மழு முதலாகப் பாசம் ஈறாக முன் சொன்னவை)
முதலாகவுள்ள; அருக்கனும் அனலும் - சூரியனும் அக்கினியும்;
அஞ்சுறும் சோதிய - அஞ்சத்தக்க ஒளியுடையனவும்; சோரியும் தூவும்
துன்னிய -
(பகைவரின்) இரத்தமும் மாமிசமும் நிறைந்து
பொருந்தினவையும்; இமையவர்க்கு எலாம் - தேவர்களுக்கெல்லாம்;
வேதனை கொடுத்தன - (முன்னைய போர்களில்) துன்பந் தந்தவையும்;
வாகை வேய்ந்தன - (வெற்றிக்கு அடையாளமான) வாகைப் பூமாலை
சூடிய வையுமாகிய; ஏதிகள் மிடைந்தன - ஆயுதங்கள் நெருங்கி
விளங்கின.

     தூ - தசை. வாகை - இருமடியாகுபெயர். சோரியும் தூவும் துன்னியது-
முன்பு தேவர்களுடன் செய்த போர்களில் தாக்கிப் பகைவரின்
இரத்தத்தையும், அவரது உடலின் மாமிசத்தையும் கொண்டமை. ஆதியின் -
ஏதிகள் என இயையும்.                                         36