2913. | உரத்தினர்; உரும் என உரறும் வாயினர்; கரத்து எறி படையினர்; கமலத்தோன் தரும் வரத்தினர்; மலை என, மழை துயின்று எழு சிரத்தினர்; தருக்கினர்; செருக்கும் சிந்தையார். |
(அந்தச் சேனை வீரர்கள்) உரத்தினர் - மிக்க வலிமை வாய்ந்தவர்கள்; உரும் என உரறும் வாயினர் - இடி போல முழங்கும் பேச்சினையுடையவர்கள்; கரத்து எறி படையினர் - கைகளால் வீசியெறியும் ஆயுதங்களையுடையவர்கள்; கமலத்தோன் தரும் வரத்தினர்- தாமரைப் பூவில் தோன்றிய பிரமன் தந்த வரங்களைப் பெற்றவர்கள்; மலை என, மழை துயின்று எழு சிரத்தினர் - மலைகளென்று எண்ணி மேகங்கள் நீண்ட பொழுது தங்கிப் பின்பு எழுந்து சென்ற தலையையுடையவர்கள்; தருக்கினர் - கருவம் மிக்கவர்கள்; செருக்கும் சிந்தையார் - போரில் பகைவரையழிக்கும் எண்ணங் கொண்டவர்கள். மலையென மழைதுயின்றெழு சிரத்தினர் - மயக்க வணி உரறுதல் - முழக்குதல். கரத்து - உருபுமயக்கம். அரக்கரின் தலைவர்கள் மட்டுமல்லாமல், பொதுவாக அரக்கர் பலரும் தவத்தால் வரம் பெற்றவர்கள் என்ற குறிப்பினைக் 'கமலத் தோன் தரும் வரத்தினர்' என்ற தொடரால் புலப்படுத்துகிறார். செருத்தல் - அழித்தல். செருக்கதல் - எழுச்சியுறுதல்; உற்சாகம் என்றும் கொள்ளலாம். 39 |