2916. | சூலமும், பாசமும், தொடர்ந்த செம் மயிர்ச் சாலமும், தறுகணும், எயிறும், தாங்கினார்; 'ஆலமும் வெளிது' எனும் நிறத்தர்; ஆற்றலால், காலனும், 'காலன்' என்று, அயிர்க்கும் காட்சியார். |
சூலமும் - சூலாயுதத்தையும், பாசமும் - பாசம் என்னும் ஆயுதத்தையும்; தொடர்ந்த செம்மயிர்ச் சாலமும் - அடர்ந்த சிவந்த மயிர்த் திரளையும்; தறுகணும் - அஞ்சாமையையும்; எயிறும் - கோரப் பற்களையும்; தாங்கினார் - கொண்டவர்கள்; ஆலமும் வெளிது எனும் நிறத்தர் - நஞ்சும் (தங்கள் நிறத்திற்கு முன்) வெண்மையானது என்று சொல்லத்தக்கவாறு கரிய நிறத்தையுடையவர்கள்; ஆற்றலால் - (தமது) வலிமையால்; காலனும் - யமனும்; காலன் என்று அயிர்க்கும் - (தன்னையழிக்கும்) யமனோ என்று ஐயம் கொள்ளத்தக்க; காட்சியார் - தோற்றமுடையவர்கள். அரக்கரின் கருமை நிறத்தை விளக்க 'ஆலமும் வெளிதென்னும் நிறத்தர்' என்றார். காலம் - திரள். 42 |