பெருந் தானையோடு கரன் இராமன் உறைவிடம் சேர்தல் 2923. | எழுவரோடு எழுவர் ஆம், உலகம் ஏழொடு ஏழ் தழுவிய வென்றியர், தலைவர்; தானையர்:- மழுவினர், வாளினர்; வயங்கு சூலத்தர்; உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார்; |
எழுவரோடு எழுவர் ஆம் தலைவர் - பதினால்வராகிய அந்தச் சேனைத் தலைவர்கள்; உலகம் ஏழொடு ஏழ் தழுவிய வென்றியர் - பதினான்கு உலகங்களிலும் பொருந்திய வெற்றியையுடையவர்கள்; தானையர் - பெரும்படையுடையவர்கள்; மழுவினர் - மழுவையுடையவர்கள்; வாளினர் - வாளைத் தாங்கியவர்கள்; வயங்கு சூலத்தர் - விளங்கும் சூலத்தையுடையவர்கள்; உழுவையோடு அரி என - புலியும் சிங்கமும் போல; உடற்றும் சீற்றத்தார் - (பிறவுயிரை) வருத்தும் சினமுடையவர்கள். இங்குக் கூறப்பெற்ற பதினான்கு தானைத் தலைவர் வேறு; முன்பு போரில் மடிந்தவர் வேறு; 49 |