2926. | ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி. வான் தொடர் மேருவை வளைத்ததாம் என, ஊன்றின தேரினன், உயர்ந்த தோளினன், தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே. |
ஆன்று அமை - நிறைந்து விளங்கிய; எறிபடை - பகைவர்களைத் தாக்கவல்ல சேனைகளாகிய; அழுவத்து ஆர்கலி - மிக்க பரப்பையுடைய கடல்; வான் தொடர் மேருவை - ஆகாயத்தையளாவிய மேருமலையை; வளைத்ததாம் என - வளைத்துக் கொண்டது போல; ஊன்றின தேரினன்- (தன்னைச் சூழ நடுவில்) நிலை நிறுத்திய தன் தேரையுடையவனும்; உயர்ந்த தோளினன் - உயர்ந்த தோள்களையுடையவனுமாய்; யாவரும் துணுக்கம் எய்த - எல்லோரும் அஞ்சி நடுங்கும்படி; தோன்றினன் - போர்க்களத்திலே (கரன்) வந்து தோன்றினான். கடல், மேருவை வளைத்தது போலத் தூடணன் முதலிய அரக்கச் சேனையர் கரனைச் சூழ நின்றனர். மேரு கரனுக்கு உவமை; உருவகத்தை அங்கமாகக் கொண்டு வந்த உவமையணி. 52 |