2927.அசும்புறு மத கரி,
     புரவி, ஆடகத்
தசும்புறு சயந்தனம், அரக்கர்
     தாள், தர,
விசும்புறு தூளியால்,
     வெண்மை மேயின-
பசும் பரி, பகலவன், பைம்
     பொன் தேர் அரோ.

    அசும்பு உறு மதகரி - நீரூற்றைப் போன்று (இடைவிடாது)
பெருகுகின்ற மதநீரையுடைய யானைகளும்; புரவி - குதிரைகளும்; ஆடகத்
தசும்பு உறு சயந்தனம் -
பொன்னாலான கலசத்தையுடைய தேர்களும்;
அரக்கர் தாள் தர - அரக்கர்களும் (ஆகிய நால்வகைச் சேனைகளும்)
கால்களை வைத்து நடந்தமையால்; விசும்பு உறு தூளியால் -
(மேலெழுந்து) வானத்தில் போய்ப் படிந்த புழுதிகளால்; பகலவன் -
சூரியனுடைய; பசும் பரி - (தேரில் பூண்ட) பச்சைக் குதிரைகளும்;
பைம்பொன் தேர் - பசும் பொன்னிறமான தேரும்; வெண்மை மேயின -
வெண்ணிறத்தை யடைந்தன; அரோ - ஈற்றசை.

     நால்வகைச் சேனைகள் எழுப்பிய வெண் புழுதி மிகப் படிவதால்
கதிரவனின் பசும் பொன் தேரும், அதில் பூட்டப் பெற்ற பச்சைக்
குதிரைகளும் வெண்ணிறமடைந்தன என்பது. இதனால் மேலெழுந்த
புழுதியின் மிகுதி தொனிக்கும். அசும்பு - ஊற்று. சூரியனின் தேர்க்
குதிரைகள் ஏழு; அவை பசுமை நிறமுடையவை.                   53